GuidePedia

0


இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ச தனது அமைச்சரவையில் இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்‌ச, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் அதே கட்சின் சார்பாகப் போட்டியிட முயற்சிக்கிறார் என அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட பி.பி.சி. சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.


எனினும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகிக்கும் நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்‌ச போட்டியிடுவதற்கு ஜனாதிபதி இணங்காவிட்டால் அவர் கட்டாயமாக வேறு வழியை முன்னெடுப்பார் என்றும் அவரது பேச்சாளர் கூறினார்.

எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் மஹிந்த ராஜபக்‌ச பிரதமர் வேட்பாளராகவே போட்டியிடுவார் எனவும் அவரது பேச்சாளர் வலியுறுத்திக் கூறினார்.

மஹிந்த ராஜபக்‌சவினால் கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது முடங்கிப் போயுள்ளது என்றும் அவரது பேச்சாளர் குற்றஞ்சாட்டுகிறார்.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

 
Top